TN 7 Tamil

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

மதிப்பீடு

Question 1.
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
Answer:
நான் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு இவ்வாறு விளக்கி கூறுவேன்.

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் :

  • இதுதான் தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
  • இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று.
  • கி.பி. 1122 முதல் இயங்கி வருகிறது என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
  • இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.
  • தலை சிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக்கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

 

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் :

  • இப்பல்கலைக்கழகம் கி.பி. 1981 இல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் பரப்பளவு ஆயிரம் ஏக்கர்.
  • வானத்தில் இருந்து பார்த்தால், தமிழ்நாடு’ என்ற எழுத்துகள் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.
  • இந்திய நாகரித்தின் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வதே இதன் நோக்கம்.
  • இங்குக் கலை, சுவடி, வளர்தமிழ், மொழி, அறிவியல் என ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன.
  • இங்குச் சித்த மருத்துவத்துறை மூலம் மருத்துவத் தொண்டு செய்யப்படுகிறது.
  • இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கிறது.
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

உ.வே.சா. நூலகம் – சென்னை :

  • இந்நூலகம் கி.பி. 1942 இல் தொடங்கப்பட்டது.
  • தமிழ், தெலுங்கு , வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.
  • 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

கீழ்த்திசை நூலகம் – சென்னை

  • இந்நூலகம் கி.பி. 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.
  • கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் உள்ளன.
  • தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது.

 

கன்னிமாரா நூலகம் – சென்னை :

  • இது கி.பி. 1896இல் தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டின் மைய நூலகம்.
  • இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்று.
  • ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
  • இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்குப் பாதுகாக்கப்படுகிறது.
  • மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது.

வள்ளுவர் கோட்டம் – சென்னை :

  • இது திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்கிறது.
  • இதன் கட்டுமானப் பணிகள் கி.பி. 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன.
  • இதன் வடிவம் திருவாரூர் தேர் போன்று இருக்கும்.
  • இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் அடிப்பகுதி இருபத்தைந்து அடி அகலமும் இருபத்தைந்து அடி நீளமும் உடையது.
  • தேரின் மொத்த உயரம் 128 அடி.
  • நான்கு சக்கரங்கள் தனிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.
  • கடைக்கோடி இரண்டு சக்கரங்கள் பெரியனவாகவும் நடுவில் இரண்டு சக்கரங்கள் சிறியனவாகவும் உள்ளன.
  •  தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற உள்ளது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் ஒன்றும் உள்ளது.
  • 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன.
  • கருநிறப் பளிங்குக் கல்லில் அறத்துப்பால், வெண்ணிறப் பளிங்குக் கல்லில் பொருட்பால், செந்நிறப் பளிங்குக் கல்லில் இன்பத்துப்பால் எனப் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இங்குள்ள ஓவியங்கள் திருக்குறள் கருத்துகளை விளக்குகின்றன.

 

திருவள்ளுவர் சிலை – கன்னியாகுமரி :

  • இதுதான் திருவள்ளுவரின் சிலை.
  • விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இப்பணி 1990 ஆம் ஆண்டு தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்து வைக்கப்பட்டது.
  • பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது.
  • இச்சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது.

உலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை :

  • இதுதான் உலகத் தமிழ்ச் சங்கம்.
  • இது சுமார் எண்பத்தேழு ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மனத்தைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
  • இதனுள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கங்கள், நூலகம், பார்வையாளர் அரங்கம் ஆகியன கவினுற அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
  • இதன் சுற்றுச் சுவர்களில் சங்க இலக்கியக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

 

சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார் :

  • இதுதான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்.
  • கி.பி.(பொ.ஆ) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
  • இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கு ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம் ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சி மன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
Answer:
எங்கள் மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இம்மாவட்டம் கிழக்கு இந்தியா கம்பெனியால் 1790இல் உருவாக்கப்பட்டதாகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 

இம்மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள் :

  • குற்றாலம்
  • அகத்தியர் அருவி
  • முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்
  • கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
  • மணிமுத்தாறு அணை
  • நெல்லையப்பர் கோயில்
  • சங்கரன் கோயில்
  • காசி விஸ்வநாதர் கோயில்

குற்றாலம் :
குளிப்பதற்கு ஓர் ஊர் குற்றாலம்’ என்று சொல்வதற்கேற்ப குற்றாலத்தில் நாள் 6 முழுவதும் குளிக்கலாம். எப்பொழுதும் குளுமையாக இருக்கும் இடம் குற்றாலம். வானம் சிறு மழையைத் தூவிக் கொண்டே இருக்கும். குற்றாலச் சாரலை அனுபவிக்க ஜூன், ஜூலை மாதங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இங்கு மலைகள், அருவிகள் என இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. மூலிகைச் செடிகள் நிறைய உள்ளன. இம்மலையில் உள்ள பலவகையான அரிய மலர்களும் அழகைச் சேர்க்கின்றன.

இம்மலையில் மா, பலா, வாழை, கொய்யா எனப் பலவகையான பழங்களும், நெல்லிக்காய், தேங்காய் போன்றவைகளும் கிடைக்கின்றன. பாக்கு, தேன், கிழங்குகள் கிடைக்கின்றன. தேக்கு, கோங்கு , சந்தனம் ஆகிய மரங்களும் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடமாய்க் குற்றாலநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

 

அகத்தியர் அருவி :
அகத்தியர் அருவி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு அகத்தியருக்குக் கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

நெல்லையப்பர் கோயில் :
திருநெல்வேலியின் சிறப்பைப் பறை சாற்றுவதே நெல்லையப்பர் – காந்திமதி கோயில் தான். தேவாரப் பாடல் பாடப் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இக்கோயிலில் ‘ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்’ உள்ளன. இக்கோயிலில் உள்ள தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

சங்கரன் கோயில் :
சிவனும் பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணனார் என்றழைக்கப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளைக் கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது.

முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் :
இச்சரணாலயத்தின் பரப்பளவு 567 ச.மீட்டர். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காளை, ஆடு, ஓநாய், யானை மற்றும் பலவகையான மான்கள் பாதுகாக்கப்படுகின்றன.

காசி விஸ்வநாதர் கோயில் :
வட நாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் தென்னாட்டில் உள்ளது தென்காசி. இங்கு உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலின் பிரம்மாண்டமான  கோபுரத்தை 180 அடியில் 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். 1924 ஆம் ஆண்டு பேரிடியினால் அக்கோபுரம் தகர்ந்து விழுந்தது. தற்போது 168 அடி உயரத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலில் 1927ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரநாதரால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

மணிமுத்தாறு அணை :
இது மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த அணை முன்னாள் தமிழக முதல்வர் காமராசரால் கட்டப்பட்டது.

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் :
இக்காப்பகம் திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரி வட்டத்தில் உள்ளது. கூந்தன் குளம் கிராம மக்களின் அரவணைப்பில் பறவைகள் யாவும், மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு, குஞ்சுகளைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வந்து செல்லும். ஆண்டுதோறும் அதிகபட்சமாக ஒரு லட்சம் பறவைகள் வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் திருநெல்வேலி மாவட்டம் சிறியவர், பெரியவர் என அனைவருக்கும் ஏற்றபடி மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாய் அமைந்துள்ளது என்பதைப் பெருமிதத்துடன் கூறலாம்.

 

Question 2.
நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
Answer:
குற்றாலம் :
குற்றாலத்தில் எப்போதும் சாரல் மழை இருந்து கொண்டே இருக்கும். அதனால் எப்பொழுதும் குளுமையாக இருக்கும். குற்றாலச் சாரல் என்பது, இயற்கை இந்த ஊருக்கு அளித்த மிகப்பெரிய கொடையாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இச்சாரல் மழையை அனுபவிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.

இங்கு மலைகள், அருவிகள் எனப்பல இயற்கை வளங்கள் உள்ளன. காட்டுப் பகுதியும் உள்ளது. அக்காட்டுப் பகுதியில் மூலிகைச் செடிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி, சிற்றருவி, ஐந்தருவி, புலி அருவி, பேரருவி ஆகிய ஏழு அருவிகள் குற்றாலத்தில் உள்ள மலைகளில் இருந்து நிலம் நோக்கி விழும் அருவிகள் ஆகும். இவை காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும்.

அருவிகளின் அணைப்பிலே உள்ள குற்றாலநாதர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இது சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும்.

அகத்திய முனிவர் இம்மலைக்கு வந்திருந்து, தமிழை வளர்த்தார் என்றும் கூறுவர். குற்றால நாதரைப் பாட்டுடைத் தலைவராக்கித் திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியுள்ளார்.

சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர் தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் உள்ளன.

 

சிதம்பரத்தில் உள்ளது பொற்சபை, மதுரையில் உள்ளது வெள்ளி சபை, திருவாலங்காட்டில் உள்ளது ரத்தின சபை, திருநெல்வேலியில் உள்ளது தாமிர சபை, குற்றாலத்தில் உள்ளது சித்திர சபை ஆகும்.
இவ்வளவு சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்டது நான் கண்டுகளித்த குற்றாலம்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *